பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே, காங்கயம் சாலையைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி மதுமிதா (20). இவர் மகப்பேறு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 5-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலமாக மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிகிச்சைக்குப் பின் மதுமிதா காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தபோது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதேபோல, திருப்பூர் மாவட்டம், மாங்கரை பிரிவைச் சேர்ந்த கார்த்திக் (21) காய்ச்சல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு உடல் நிலை மோசமடைந்ததையடுத்து உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டார். அப்போது மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது
அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் டெங்கு அல்லது பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தாரா என்பது குறித்துத் தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 25 பேரும், வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு 103 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.