கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்றத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்றம் மற்றும் கவின் கலை மன்றங்கள் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் கு.கருணாகரன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசுகையில், "பள்ளியில் படிக்கும் 10 சதவீத மாணவர்கள் கூட கல்லூரி படிப்பைத் தொடர இயலாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, கிடைத்த வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், தாங்கள் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுத்தால்தான் இந்தச் சமுதாயம் சிறப்படையும்' என்றார்.
அதைத்தொடர்ந்து, கல்லூரிகளுக்கிடையிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், கல்லூரி இயக்குநர் ஏ.எபிநேசர் ஜெயகுமார் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.