ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி ஆதியோகி சிலை இந்திய சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவால் வடிவமைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட 112 அடி ஆதியோகி சிலையை 2017-இல் மகா சிவராத்திரி விழாவின்போது பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஜக்கி வாசுதேவால் இரண்டரை ஆண்டுகளாக சிந்தித்து வடிவமைக்கப்பட்ட மார்பளவு ஆதியோகி திருமுகம் 8 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. இது மிகப் பெரிய மார்பளவு சிலை என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து சத்குரு கூறியதாவது:
ஆதியோகி சிலை இந்திய சுற்றுலாத் துறையின் "இன்கிரெடடிபிள் இந்தியா' பிரசாரத்தின் அங்கமாக இடம் பெற்றுள்ளதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். உலகின் அடுத்த தலைமுறையினர் நம்பிக்கைகளை பின்பற்றுவர்களாக இல்லாமல் தேடுதல் உடையவர்களாக இருப்பது அவசியம். தத்துவம், சித்தாந்தம், நம்பிக்கை முறைகள் அனைத்தும் காரண அறிவு மற்றும் அறிவியல் பூர்வமான சோதனைகளுக்கு முன்பாக தாக்குப்பிடிக்க முடியாமல் தன்னால் உடைந்துபோகும்.
அப்போது உள் விடுதலைக்கான ஏக்கம் அதிகரிக்கும். அச்சமயத்தில் ஆதியோகியும், அவரது யோக அறிவியலும் மிகுந்த முக்கியத்துவம் பெறும். யோகப் பாரம்பரியத்தில் ஆதியோகியை யோகத்தின் மூலமாகக் கருதுகிறோம். மனிதர்கள் தங்களது எல்லைகளைக் கடந்து உச்ச நிலையை அடைய 112 வழிமுறைகளை ஆதியோகி வழங்கியுள்ளார். மிகக் குறைவான பராமரிப்பே தேவைப்படும் விதமாக ஆதியோகியின் திருமுகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நினைவுச் சின்னமாக உருவாக்கப்படவில்லை. யோக அறிவியலின் மூலம் தன்னிலை மாற்றம் உருவாக்குவதற்கான உந்து சக்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதியோகியின் மகிமை பொருந்திய திருமுகத்திற்கு முன்பாக 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து தியானம் செய்ய முடியும். இந்த இடம் 11 டிகிரி அட்சரேகையில் அமைதிருப்பது ஆன்ம சாதனையில் ஈடுபட்டிருப்போருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.