அன்னூரில் பசுமைப் பேராயம் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்னூரில் இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட்டு வரும் அமைப்பான பசுமைப் பேராயத்தின் மாதாந்திரக் கூட்டம் கோவில் தோட்டத்தில், அதன் தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இதில், கர்நாடக மாநிலத்தின் முன்னோடி இயற்கை விவசாயி ரவீந்தரநாத் ஷெனாய் கலந்து கொண்டு பேசுகையில், "இயற்கை விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டால் நபார்டு வங்கி, மத்திய அரசின் வங்கிகளிடமிருந்து எளிமையாகக் கடன் பெற்று, விவசாயத் தொழில் செய்யலாம். விவசாய விளை பொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்தால் கூடுதல் வருமானம் பெறலாம்' என்றார்.
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி நடராஜன் "கொம்பு சாணம்' எனும் சத்துகள் நிறைந்த உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
இயற்கை விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியங்களை அதிக அளவில் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலுக்கு நாட்டு பசு மாடு, கன்று தானமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பசுமைப் பேராயத்தின் செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் நந்தகுமார், புளியம்பட்டி, அன்னூர், அவிநாசி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் கலந்துகொண்டனர். சுபசேகரன் நன்றி கூறினார்.