பொய்ப் புகாரின் அடிப்படையில் கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவி ஆர்.பிரியா இடைநீக்கம் செய்யப்பட்டதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் அஜித்குமார், குணசேகரன், பவதாரணி, ஸ்ரீதா ஆகியோர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை, அரசு சட்டக் கல்லூரி வகுப்பில் மத ரீதியாகவும், பாலின ரீதியாகவும் பேசியதாகக் கூறி, மாணவி பிரியா ஏப்ரல் 13-ஆம் தேதி தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். பிரியாவின் மீது பொய்ப் புகாரின் அடிப்படையில் தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வகுப்பில் நடைபெற்ற சம்பவம் குறித்து விளக்கமாக எழுதி, கல்லூரி முதல்வரிடம் மனுவாக அளித்துள்ளோம். அதைச் சட்டக் கல்வி இயக்குநருக்கு அனுப்புவதாகவும், தற்காலிக நீக்கத்தை ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கே இருப்பதாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
அதேவேளையில், மாணவி பிரியா, காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மட்டுமே வகுப்பில் பேசினார். எனவே, பிரியா மீதான இந்த நடவடிக்கையை சட்டக் கல்வி இயக்குநரகம் ரத்து செய்ய வேண்டும் என்றனர். ஏற்கெனவே பிரியாவின் இடைநீக்கத்தை ரத்து செய்து மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வழக்குரைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.