கோவையில் 72 ஆவது சுதந்திர தின விழா: ஆட்சியர் கொடியேற்றினார்

கோவையில் நடைபெற்ற 72 ஆவது சுதந்திர தின விழாவில் ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கொடியேற்றினார்.

கோவையில் நடைபெற்ற 72 ஆவது சுதந்திர தின விழாவில் ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கொடியேற்றினார்.
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தேசியக் கொடி ஏற்றி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை  ஏற்றுக் கொண்டார். இவ்விழாவில்  சுதந்திர போராட்ட தியாகிககள் கௌரவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து வேளாண்மைத் துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.66 ஆயிரம் மதிப்பில் வேளாண் பொருள்களும், 3 பயனாளிகளுக்கு தோட்டக் கலைத் துறை மூலம் கோகோ நாற்றுகள் மற்றும் வெங்காய பட்டறை அமைக்க ரூ.1.87 லட்சம் நிதியுதவியும், தாட்கோ மூலம் சுய தொழில் தொடங்க வண்டிகள் வாங்க 5 பயனாளிகளுக்கு ரூ.26.93 லட்சம் கடனுதவியும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் செயற்கை காலும், மகளிர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் தொழில் தொடங்க ரூ.ஒரு லட்சம் வீதம் பத்து பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் கடனுதவியும் வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.90 ஆயிரம் மதிப்பில் சலவைப் பெட்டியும், வருவாய்த் துறை மூலம் 254 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணை என மொத்தம் 304 பயனாளிகளுக்கு ரூ.41.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இது தவிர பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வழங்கினார். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சரவணம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐசிசி நடுநிலைப்பள்ளி, ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டி.என்.ஜி.ஆர் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மகளிர் மேல்நிலைப்பள்ளி, சின்மயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மசாஸ்தா, ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி, சி.சி.எம்.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 9 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
நிகழ்ச்சியில் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பாரி, துணைத் தலைவர் கார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகர் காவல் துணை ஆணையர் லட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com