புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, இணையதள மூலம் மேற்கொள்ளும் பணிகளுக்கு செலவினங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலமாக ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட 24 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சான்றிதழ்கள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு இசேவை மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இச் சான்றிகழ்களை வழங்க கிராம நிர்வாக அலுவலர்கள் ஆன்லைன் முறையில் பரிந்துரை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கான செலவினங்களை வழங்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந் நிலையில் அண்மையில் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு ஆன்லைன் மூலம் பரிந்துரை செய்யப்படும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் தர்னாவில் ஈடுப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கோவை டாடாபாத் அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் வழங்க வேண்டும். ஆன்லைன் மற்றும் கணினி வழியில் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஏற்படும் செலவினங்களை அளிக்க வேண்டும். பணியிடங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.