அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஆட்சியர் அலுவலகம் அருகே பழங்குடியின மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தை அடுத்த நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மலசர்பதி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கூறியதாவது:
மலசர்பதி கிராமத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 30 ஆண்டுகளுக்கு முன் அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகளில் குடியிருந்து வருகிறோம். இந்த வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. மழைக் காலங்களில் வீடுகளில் மழை நீர் தேங்கிவிடும். குழந்தைகளுடன் அச்சத்துடனேயே வசித்து வருகிறோம். கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தரமான வீடு, கழிப்பிடம், தெருவிளக்கு, குடிநீர் வசதிகளைச் செய்துதர வேண்டும் எனத் தெரிவித்தனர். இது குறித்த கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.