அன்னூரை அடுத்துள்ள செல்லனூர் குடியிருப்புப் பகுதியில் பொதுக் கழிப்பிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி செயல்அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்துள்ளனர்.
அன்னூர் பேரூராட்சிக்கு உள்பட்ட1-ஆவது வார்டு செல்லனூரில் குடியிருப்புப் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து பொதுமக்கள் கோயில், குடிநீர் கிணறு, குடியிருப்புகளுக்கு மத்தியில் பொதுக் கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு கெரிவித்தனர். இதையடுத்து, பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பணியை நிறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் பேரூராட்சி செயல்அலுவலரிடம் இந்த இடத்தில் பொதுக் கழிப்பிடம் கட்ட வேண்டாம் என்றும், ஒதுக்குப் புறமான பகுதியில் கட்ட வேண்டும் என்று மனு அளித்தனர். இதற்குப் பதில் அளித்த செயல்அலுவலர், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.