விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.35 ஆக அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் அளித்த மனு விவரம்: விவசாயிகளிடம் பால் வியாபாரிகள் ஒரு லிட்டர் பசும் பாலை ரூ. 20 முதல் ரூ. 22 வரை கொள்முதல் செய்கின்றனர். கூட்டுறவு கொள்முதல் நிலையத்தில் ரூ. 25 முதல் ரூ. 27 வரையும், தனியார் நிறுவனஙகள் ரூ. 23 முதல் ரூ. 25 வரையும்
பால் கொள்முதல் செய்கின்றனர். பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் பால் ரூ.50 வரை விற்கப்படுகிறது. இதன் மூலமாக பால் வியாபாரிகளுக்கு லிட்டருக்கு ரூ. 25 வரை லாபம் கிடைக்கிறது.
மாட்டுக்கு பசுந்தீவனம் 10 கிலோ, உலர் தீவனம் 5 கிலோ, அடர் தீவனம் 5 கிலோ மற்றும் பராமரிப்பு என ஒரு மாட்டுக்கு ரூ. 250 வரை செலவாகிறது. சராசரியாக ஒரு லிட்டர் பால் உற்பத்திச் செலவு ரூ. 20 ஆக உள்ளது. ஆனால், விவசாயிகளிடம் சராசரியாக ரூ. 25-க்குதான் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, தமிழக அரசே விவசாயிகளிடம் இருந்து ஒரு லிட்டர் பாலை ரூ. 35-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். பால் உற்பத்தி செலவில் 50 சதவீதத்தை மானியமாக வழங்க வேண்டும்.
கால்நடைகளுக்குத் தேவையான தவிடு, புண்ணாக்கு, அடர் தீவனங்களை கொள்முதல் செய்து அரசு விற்பனை மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மாடுகள் வாங்கவும், கொட்டகை அமைக்கவும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.