முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பிப்ரவரி 24-இல் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதென காரமடை ஒன்றிய அதிமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காரமடை ஒன்றிய அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஜெயலலிதா பிறந்த நாள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு காரமடை ஒன்றியச்செயலர் பி.டி கந்தசாமி தலைமை வகித்தார். காரமடை ஒன்றிய பேரவைச் செயலர் மகேந்திரன் வரவேற்றார். இதில், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், ஓ.கே சின்னராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், உறுப்பினர் படிவங்களை அனைத்து கிளைச் செயலர்களுக்கும் நேரில் வழங்குவது, பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளை கிளைக் கழகங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், 38 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி மேற்கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் ஒன்றியச் செயலர் டி.கே துரைசாமி, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றியச் செயலர் பொன்னுசாமி, முன்னாள் ஒன்றியத் தலைவர் எம்.எஸ்.ராஜ்குமார், ஒன்றிய துணைச் செயலர் ரங்கராஜ், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலர் விஜயகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஒன்றிய மாணவரணிச் செயலர் மருதாசலம் நன்றி கூறினார்.