கோவையை அடுத்த வடவள்ளி அருகே லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து வடவள்ளி போலீஸார் கூறியதாவது:
கோவை, வடவள்ளி குருசாமி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சவிதா (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சவிதா தனது மகன்களை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு புதன்கிழமை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பும்போது மருதமலை-தொண்டாமுத்தூர் பிரிவில் பின்னால் வந்த லாரி, சவிதாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.