தமிழகம் பயங்கரவாதிகளின் பயிற்சிக் களமாக மாறிவருகிறது: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகம் பயங்கரவாதிகளின் பயிற்சிக் களமாக மாறிவருவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
கோவையில் 1998-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 20-ஆம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழகம் தற்போது அமைதிப் பூங்காவாக இல்லை. பயங்கரவாத இயக்கங்களின் பயிற்சிக் களமாகமாறி வருகிறது. இதை ஆட்சியாளர்கள், காவல் துறையினர் கவனத்தில் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.
நக்ஸலைட், மாவோயிஸ்ட், தமிழ் தீவிரவாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆகியோர் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு உதாரணம். இந்த போராட்ட முடிவில் உளவுத் துறையே இத்தகவலைத் தெரிவித்துள்ளது. ஆகவே பயங்கரவாதிகளின் செயல்பாட்டை தடுக்க தமிழக அரசும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை அழித்து விட்டனர். கோவையில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுதூண் அமைக்க வேண்டும் என்றார்.
தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்:
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் பல அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றனர். அவர்கள் எம்.ஜி.ஆர். பிறந்த நாளின்போது விடுதலை செய்யப்பட்டால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அஸ்தமிக்கும் காலம் தொடங்கி விட்டது என்று அர்த்தம் என்றார்.
இதைத்தொடர்ந்து, குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநிலச் செயலாளர் கிஷோர் குமார், சேவா பாரதி மாநிலத் தலைவர் ராமநாதன், பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக மாவட்டத் தலைவர் சி.ஆர்.நந்தகுமார், இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 67 பெண்கள் உள்பட 926 பேரை ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.