வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் மறு அளவீடு தொடர்பாக தமிழக வருவாய்த் துறை செயலர் தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
வால்பாறையில் 50-க்கு மேற்பட்ட தனியார் எஸ்டேட்கள் உள்ளன. பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இந்த எஸ்டேட் நிர்வாகத்தினருக்கு சொந்தமான பகுதிகளில் புறம்போக்கு, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சில பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இதன்படி கடந்த சில மாதங்களாக அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் நில அளவை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளைக் கன்டறிந்து மறு அளவீடு செய்து வந்தனர். இந்நிலையில், தமிழக வருவாய்த் துறை செயலர் சந்திரமோகன் தலைமையில் நில அளவை மற்றும் நில வரி ஆணையர் செல்வராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் எஸ்டேட் பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செயலர் சந்திரமோகன் கூறியதாவது:
1993-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது மறு நில அளவை செய்யப்பட்டுள்ளது. எஸ்டேட் நிர்வாகத்தினர் தங்களுக்குரிய இடத்தில் என்ன செய்கின்றனர் என்று நேரடியாக ஆய்வு செய்துள்ளோம். ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அதனை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், விவசாய நிலம், காலி நிலம், குடியிருப்பு பகுதி என தனித்தனியாக நில அளவை செய்து வரி விதிப்பு செய்ய உள்ளோம் என்றார்.