வரையறுக்கப்பட்ட மதிப்பூதியம் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு ரூ. 3,500 என வழங்கப்பட்டு வரும் சிறப்புக் காலமுறை ஊதியத்தை மாற்றி ரூ. 15, 700 என வரையறுக்கப்பட்ட மதிப்பூதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை ரூ. 3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பணிக்கொடையாக ரூ. 5 லட்சமாக வழங்க வேண்டும். குழந்தைகளுக்கான அரசு மானியமாக 60 பைசா மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரூ. 3 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் இன்னாசிமுத்து தலைமையில் சத்தணவு ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் பழனிசாமி ராஜகோபால் உள்ளிட்ட 350- க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.