கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட விவசாய அணித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் உமாமகேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்ற. இந்த சமத்துவப் பொங்கல் விழாவை காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயகுமார் தொடக்கிவைத்தார்.
இதில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்தனர். இதற்காக கட்சி அலுவலகத்தை கிராமிய சூழலில் அலங்கரித்துப் பசு மாடுகளை அழைத்து, பூஜை நடத்தி பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட முன்னாள் தலைவர் கே.எஸ்.மகேஷ்குமார், கணபதி சிவகுமார், கோவை செல்வன், உமாபதி, திருமூர்த்தி, கருணாகரன், வழக்குரைஞர் கருப்பசாமி, சொக்கம்புதூர் கனகராஜ், கே.வி.செல்வராஜ், சர்க்கிள் தலைவர் காலனி ஜனார்த்தனன், அசோக்குமார், ரூபட், ரங்கநாதன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.