சென்னை சுதேசி இயக்கம், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி ஆகியன சார்பில் உலகப் பனைப் பொருளாதார மாநாடு பேரூரில் புதன்கிழமை தொடங்கியது.
பனை மரங்களைப் பாதுகாத்தல், மக்களுக்குப் பனை மரத்தால் விளையும் பயன்கள், நன்மைகள், பொருளாதார மேம்பாடு மற்றும் பணி வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதன்கிழமை தொடங்கிய இந்த மாநாடு ஜனவரி 19-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
இதன் தொடக்க விழாவுக்கு பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமை வகித்தார். தமிழ்க் கல்லூரி செயலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அருண்சீனிவாசன் வரவேற்றார். சுதேசி இயக்கத் தலைவர் குமரிநம்பி நிகழ்ச்சி குறித்து அறிமுகவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக தென்னை நார் வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் முனைவர் பஞ்சவர்ணம் எழுதிய "பனை பாடும் பாடல்' மற்றும் சுதேசி இயக்கத் தலைவர் குமரிநம்பியின் "பனைப் பொருளாதாரம்' ஆகிய நூல்களை தவத்திரு மருதாசல அடிகளார் வெளியிட, இந்திய தொழிலாளர் விவசாயிகள் பேரவையின் அகில இந்திய செயலாளர் கோன் பெற்றுக்கொண்டார்.
தமிழ் மாநில சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் மணிவாசகம் கருத்துரை வழங்கினார். இதைத் தொடர்ந்து கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. இதில், விவசாயிகள் வாழ்வுரிமை நலச்சங்க தலைவர் தமிழ் அரிமா, கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் சகாப், தென்னிந்திய பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகி வினோத் ராமகிருஷ்ணன், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, "பனைத் தொழில்நுட்பமும் வேலைவாய்ப்பும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.