சூலூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை பணியில் இருக்கும்போது விரட்டிவந்து பாட்டிலால் குத்தியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சூலூர் அரசுப் போக்குவரத்துப் பணிமனையைச் சேர்ந்த பேருந்து திங்கள்கிழமை இரவு உக்கடத்திலிருந்து கண்ணம்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அதை, உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் செந்தில்குமார் (30) என்பவர் ஓட்டிவந்தார். பள்ளபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் நடத்துநராக இருந்தார். இந்நிலையில், பேருந்து ஒண்டிப்புதூர் அருகே வந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனமும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, இருசக்கர வாகத்தை ஓட்டிவந்த பாரதிபுரத்தைச் சேர்ந்த மாசானம் மகன் விஜய், ஓட்டுநர் செந்தில்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தனது இருசக்கரவாகனத்தை ஓட்டிக்கொண்டு விஜய் பாரதிபுரம் வந்துள்ளார். பாரதிபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட பேருந்தை நிறுத்தியபோது ஓட்டுநர் செந்தில்குமாருடன், விஜய் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, கையில் வைத்திருந்த பாட்டிலை உடைத்து ஓட்டுநர் செந்தில்குமாரின் முகத்தில் விஜய் குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த செந்தில்குமார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இதுகுறித்து, சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விஜயை கைதுசெய்தனர்.