சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல 11 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமை வனத் துறையினர் அனுமதி வழங்கினர்.
சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்ததால் கோவை குற்றாலம் அருவியில் ஜூன் 8ஆம் தேதி இரவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அருவிக்குச் செல்ல ஜூன் 9ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் தடை விதித்திருந்தனர்.
மேலும், அருவிக்குச் செல்லும் வழியில் மரக் கிளைகள் முறிந்து விழுந்ததாலும், வெள்ளப் பெருக்கில் அருவியில் பாறைகள் உருண்டு வந்ததாலும் இத் தடையை நீட்டித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரு நாள்களாக சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் மழை அளவு சற்று குறைந்தது. இதையடுத்து அருவிக்குச் செல்லும் வழியில் விழுந்து கிடந்த மரங்களையும், வெள்ளப் பெருக்கில் அடித்து வரப்பட்ட பாறைகளையும் வனத் துறையினர் அப்புறப்படுத்தினர்.
11 நாள்களுக்கு பின் அனுமதி: இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடந்ந்து கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல 11 நாள்களுக்கும் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமை அனுமதி வழங்கப்பட்டது. கோவை குற்றாலம் அருவியில் அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்பட்டது.
முதல் நாளில் 372 பேர் வருகை: கோவை குற்றாலம் திறந்து முதல் நாளான புதன்கிழமை பெரியவர்கள் 351 பேரும், சிறியவர்கள் 11 பேர் என 372 பேர் வருகை புரிந்துள்ளனர். இதில் வாகனக் கட்டணம், நுழைவுக் கட்டணம் மூலமாக ரூ.21,420 வசூலாகியுள்ளதாக போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா தெரிவித்துள்ளார்.