காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில், கோவை -ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் மகள் பவித்ரா (11) தங்கி அருகிலுள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் சிறுமி பவித்ரா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.