கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே நண்பர்களைக் கொலை செய்ய முயன்ற வழக்கில், தொழிலாளிக்கு 7ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பெட்டதாபுரத்தைத் சேர்ந்தவர் எம்.கருணாகரன் (30). இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, ராமமூர்த்தி, சிவகுமார், கார்த்திக்குமார் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அப்பகுதியிலுள்ள விநாயகர் கோயில் அருகே நின்று பேசிக் கொண்டிருப்பது வழக்கம். இந்த நிலையில், கருணாகரனுக்கும், மூர்த்தி கோஷ்டியினருக்கும் விரோதம்
ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மூர்த்தி, ராமமூர்த்தி ஆகியோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய கருணாகரன் 2013 அக்டோபர் 13-ஆம் தேதி முயன்றுள்ளார். இதுகுறித்து, பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கருணாகரனைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை 2-ஆவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி உமாராணி தீர்ப்பு வழங்கினார். இதில், கருணாகரனுக்கு 7ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சசிகுமார் ஆஜராகினார்.