கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
கோவை மாநகரில் கடந்த சில நாள்களாகவே கடுமையான வெயில் அடித்தது. இதனால் காலை 11 முதல் மாலை 4 மணி வரையில் வெளி இடங்களில் சுற்றுவதை ஏராளமானோர் தவிர்த்து வந்தனர். மேலும், தர்பூசணி, பழங்கள், ஜூஸ் போன்ற வியாபாரங்கள் சூடுபிடிக்க துவங்கியது.
இந்த நிலையில், கோவை மாநகரின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிற்பகல் 2 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், உக்கடம், சூலூர், பி.கே.புதூர், குனியமுத்தூர், சிங்காநல்லூர், பீளமேடு, சேரன் மாநகர், ராமநாதபுரம், கணபதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த திடீர் மழை பெய்தது. கோவை புறநகர் பகுதிகளான சூலூர், க.க.சாவடி மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
மதுக்கரையில்...: மதுக்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலையில் சாரல் மழை பெய்தது.
இதனால், அந்தப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.