வால்பாறையில் பணியின்போது உயிரிழந்த எஸ்டேட் தொழிலாளியின் குடும்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவின்பேரில் நஷ்ட ஈடு தொகை வழங்கப்பட்டது.
வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட்டில் பணியாற்றிவந்தவர் செல்லத்துரை. இவர் எஸ்டேட் தொழிற்சாலையில் 2013-ஆம் ஆண்டு பணியாற்றி கொண்டிருந்தபோது உயிரிழந்தார். இவருக்கு எஸ்டேட் நிர்வாகம் நஷ்டஈடு தொகை தர மறுத்தது.
இதனையடுத்து செல்லத்துரை குடும்பத்தினர் அதிமுக தொழிற்சங்கம் மூலம் வழக்குத் தொடர்ந்தனர். கோவை தொழிலாளர் நலத் துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், செல்லத்துரை குடும்பத்துக்கு நஷ்ட ஈடு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து எஸ்டேட் நிர்வாகத்தினரிடம் இருந்து பெறப்பட்ட ரூ. 5 லட்சத்து, 64 ஆயிரத்து, 227 தொகையை இறந்த தொழிலாளி செல்லத்துரை மனைவி தவமணியிடம் வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு வழங்கினார்.
வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வி.அமீது, துணைத் தலைவர் மா.மயில்கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.