பேருந்து பயணியிடம் விட்டுச் சென்ற 2 நாளே ஆன பெண் சிசு மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
கோவை, காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்துக்கு பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையத்தில் பயணிகள் சிலர் இறங்கியுள்ளனர்.
அவர்களுடன் 2 பெண்களும் இறங்கியுள்ளனர். இதில் சிசுவை கையில் வைத்திருந்த ஒரு பெண், அருகில் நின்ற நபரிடம் குழந்தையைக் கொஞ்சம் பிடியுங்கள் எனக் கூறி அவரிடம் குழந்தையைக் கொடுத்துள்ளார். பின்னர் அப்பெண்கள் திடீரென மாயமாகி விட்டனர். இது குறித்து சிசுவை வைத்திருந்த நபர், சாயிபாபா காலனி போலீஸாருக்கும், சைல்டு லைன் அமைப்பினருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த சைல்டு லைன் அமைப்பினர் சிசுவை மீட்டனர்.
பின்னர் கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேலுவிடம் குழந்தையை ஒப்படைத்தனர். கைவிடப்பட்ட பெண் சிசு பிறந்து இரண்டு நாள்களே ஆனது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த சிசு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.