வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினருக்கான ஏற்கெனவே உள்ள அலுவலகம் மேற்கூரை இடியும் நிலையில் பழுதடைந்து இருந்தது.
இதனால் அந்த அலுவலகத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு இதுவரை செல்லவில்லை. இந்நிலையில் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் செயல்படாமல் இருப்பதாகவும், பொதுமக்கள் மனு அளிக்க முடியாத நிலை இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒரு அறை சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த அலுவலகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இனி வரும் காலங்களில் பொதுமக்கள் இந்த அலுவலகத்துக்கு வந்து மனுக்கள் அளிக்கலாம் என்று சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு கூறினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வி.அமீது, துணைத் தலைவர் மயில்கணேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.