கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (32). இவர் வைசியாள் வீதியில் சென்று கொண்டிருந்தபோது அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் 2008 ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, இழப்பீடு வழங்கக் கோரி ராஜ்குமாரின் தாயார் சீதாலட்சுமி கோவை மாவட்ட 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சீதாலட்சுமிக்கு ரூ. 75 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் தாமதப்படுத்தி வந்தது.
இதையடுத்து, சீதாலட்சுமி தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ. 75 ஆயிரத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பிறகும் அவருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.
இதையடுத்து, அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தவின்பேரில் கோவை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதன் பிறகு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதிக்குள் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன் பேரில் ஜப்தி செய்யப்பட்ட பேருந்து விடுவிக்கப்பட்டது.