காட்டுத்தீப் பிடிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கி வனத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் வால்பாறையை அடுத்த அய்யர்பாடி எஸ்டேட் சாலையோரம் உள்ள வனத்தில் காட்டுத்தீ பரவி மரம், செடி, கொடிகள் எரிந்து சேதமாகின. இந்நிலையில், குரங்கணி காட்டுத் தீ சம்பவத்துக்குப் பின் அரசு உத்தரவின்பேரில் வனத் துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
வனப் பகுதியில் பயணம் செய்யும்போது எளிதில் தீப் பற்றக்கடிய பொருள்கள் எடுத்துச் செல்லக் கூடாது. புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் காட்டுப் பகுதியில் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வால்பாறை, பொள்ளாச்சி எஸ்டேட் சாலை வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் விநியோகித்து வருகின்றனர்.