மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்க சென்ற திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர், பெரியாண்டிபாளையம் நாச்சியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. பனியன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (20). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சந்தோஷ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுவிட்டு தனது நண்பர்கள் மோகன், கெளதம், கார்த்திக்ராஜ், ரஞ்சித், மனோஜ்குமார் ஆகியோருடன் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு காரில் செவ்வாய்க்கிழமை மதியம் வந்துள்ளார்.
சுவாமி தரிசனம் முடிந்ததும், அனைவரும் நெல்லித்துறை அருகே விலாமரத்தூர் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தோஷ், கரையோரத்தில் உள்ள மரத்தில் ஏற முயன்றாராம்.
இதில் அவர் நிலை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார். இதில் நீரில் மூழ்கிய சந்தோஷ் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் நீரில் மூழ்கிய சந்தோஷின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.