ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு, சுகாதாரம், குடிநீர்ப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவை, லேபர் யூனியன் ஏஐடியூசி, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு, பொதுப் பணியாளர் சங்கம், ஜனசக்தி லேபர் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல சராசரியாக மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ரூ. 15 கோடி ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்க நிர்வாகிகள் என்.செல்வராஜ், இரா.தமிழ்நாடு செல்வம், சி. பழனிசாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.