கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. இதில் 2 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கோவையில் கடந்த திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இதையடுத்து, புதன்கிழமை மாலை காந்திபுரம், கணபதி, ஆத்துபாலம், ராமநாதபுரம், ஆட்சியர் அலுவலகம், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சில மணி நேரம் மழை பெய்தது. மேலும், காந்திபுரம் இரண்டாவது வீதி, போத்தனூர் சிட்கோஆகிய இரு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தயிர் இட்டேரி உள்ளிட்ட சில பகுதிகளில் சூறாவளி காற்றின் காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன.
மதுக்கரையில்...
மதுக்கரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் பலத்த காற்று வீசத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து, மதுக்கரை, செட்டிபாளையம், எட்டிமடை, நவக்கரை, திருமலையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்தது.