சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயத்தின் இறுதிநாள் புதன்கிழமை நடைபெற்றது. சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கனகராஜ் கலந்து கொண்டார்.
சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் வருவாய்த் தீர்ப்பாயம் நடைபெற்றது. புதன்கிழமை வருவாய் தீர்ப்பாயத்தின் இறுதிநாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் சூலூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கனகராஜ் கலந்துகொண்டு, முதியோருக்கு உதவித்தொகை பரிந்துரைச் சான்றுகளை வழங்கினார்.
முன்னதாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக் கன்றுகளை அவர் நட்டார். இந்த நிகழ்ச்சியில் சூலூர் வட்டாட்சியர் ஜெகதீசன், வருவாய்த் தீர்ப்பாய அலுவலர் பாலசுப்பிரமணியம், துணை வட்டாட்சியர் முத்துகுமார், சிறப்பு வட்டாட்சியர் இந்திராணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் இந்திரா, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். செஞ்சேரிப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குமார் நன்றி கூறினார்.