கோவையை அடுத்த மருதமலையில் குடும்பப் பிரச்னை காரணமாக செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலைக்கு முயன்றார்.
கோவை, மருதமலை அடிவாரத்தில் உள்ள அன்னை இந்திரா நகரில் வசித்து வருபவர் தினேஷ் (32). இவரும், கேரளத்தைச் சேர்ந்த ரூபி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகள் உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக ரூபி தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். இதனால் மனமுடைந்த தினேஷ் மருதமலை அடிவாரத்தில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் ஏறியுள்ளார். மனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டும்; இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
தகவலறிந்து அங்கு வந்த வடவள்ளி போலீஸார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, இரவு 10 மணி அளவில் தினேஷ் தற்கொலை முடிவைக் கைவிட்டு கீழே இறங்கினார்.