தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சித்தாபுதூர் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான விநாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கோவை, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜி.வி.ரவி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நித்தியானந்தன் தேவராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினார்.
இந்தப் போட்டியில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான, தமிழ் வழி மாணவர்களுக்கான பிரிவில் சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது. சின்னவேடம்பட்டி, ராமானந்த அடிகளார் உயர்நிலைப் பள்ளி 2ஆவது இடத்தைப் பிடித்தது. 9, 10ஆம் வகுப்பினருக்கான பிரிவில் சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், ஒப்பணக்கார வீதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தன. 11, 12 ஆம் வகுப்பினருக்கான பிரிவில் சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், காளப்பட்டி, அரசுப் பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தது.
6 - 8ஆம் வகுப்பு ஆங்கில வழிப்பாட மாணவர்களுக்கான பிரிவில் கணபதி சி.எம்.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதலிடமும், வீரபாண்டி பிரிவு விவேகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 2ஆவது இடமும் பிடித்தன. 9, 10ஆம் வகுப்பினருக்கான பிரிவில் சி.எம்.எஸ். பள்ளி முதலிடமும், கடலைக்கார சந்து ஜி.டி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 2ஆவது இடமும் பிடித்தன. 11, 12ஆம் வகுப்பினருக்கான பிரிவில் சி.எம்.எஸ். பள்ளி முதலிடத்தையும், விளாங்குறிச்சி ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 2ஆவது இடத்தையும் பிடித்தன.