கோவை, கரும்புக்கடை பகுதியில் கேபிள் ஆபரேட்டரின் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கரும்புக்கடை வள்ளல் நகரைச் சேர்ந்தவர் சாகுல் அமீது(51). இவர் அதேபகுதியில் கேபிள் டிவி நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் குடும்பத்துடன் சென்னைக்கு வியாழக்கிழமை சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து சாகுல் அமீது வீட்டில் லைட் போடுவதற்காக அவரது உறவினர் வெள்ளிக்கிழமை மாலை வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சாகுல் அமீதுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 65 பவுன் நகைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போத்தனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.