தப்பிச் சென்ற கைதியை பிடிக்க தனிப்படை கேரளத்தில் முகாம்
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது தப்பிச் சென்ற கைதியைப் பிடிக்க தனிப் படையினர் கேரளத்தில் முகாமிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் பி.செல்வராஜ் (31). இவர், பீளமேடு பகுதியில் 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அக்டோபர் 6 ஆம் தேதி சிறையில் தனியாக இருந்தபோது, மணிக்கட்டை அறுத்தும், கொசுவர்த்தி சுருளைக் கரைத்துக் குடித்தும் செல்வராஜ் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து சக கைதிகள் தெரிவித்த தகவலின்படி சிறைத் துறை காவலர்கள் செல்வராஜை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த செல்வராஜ் அக்டோபர் 9 ஆம் தேதி கழிவறையின் ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படையினர் கேரளத்தில் முகாம்
இந்த நிலையில், கேரள மாநிலம், கண்ணனூரில் செல்வராஜ் வேலை செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆகவே, அவர் அங்கு தப்பிச் சென்றிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்படி தனிப் படையினர் கேரளத்தில் முகாமிட்டு செல்வராஜைத் தேடி வருகின்றனர்.
மேலும், செல்வராஜின் புகைப்படங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பியும், துண்டுப் பிரசுரங்களை பொது இடங்களில் விநியோகித்தும் தேடிவருகின்றனர்.