சூலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சுல்தான்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மதுக்கரையை அடுத்த திருமலையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (55). இவர் சூலூரை அடுத்த சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். 1988 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று தற்போது உதவி ஆய்வாளராக உள்ளார்.
இந்நிலையில் சுல்தான்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை பணியின் போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை கரடிவாவியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இவருக்கு காஞ்சனா (45) என்ற மனைவியும், பெங்களுரூ மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் சுபாஸ்ரீ (23) என்ற மகளும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஹரி சந்தோஷ் (18) என்ற மகனும் உள்ளனர்.