வெளிமாநில தோட்டத் தொழிலாளர்களின் வருகை அதிகரித்திருப்பதால், குற்றச் சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்புப் பணியை வால்பாறை காவல் துறையினரின் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், சமீபகாலமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. இதனால் தொழிலாளர்கள் பற்றாக்குறையைப் போக்க அஸ்ஸாம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினக் பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
இதனால் தற்போது வெளி மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை வால்பாறை பகுதியில் அதிகரித்துள்ளது. அண்மையில் முடீஸ் தபால் நிலையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பி ஓடியவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்படுவதால், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் மூலம் அடையாள அட்டைகள் வழங்கி, கண்காணிப்புப் பணியையும் தீவிரப்படுத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.