பொள்ளாச்சி அருகே நேரிட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
நெகமம் அருகே உள்ள ஜல்லிபட்டி, காசிலிங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் திருவேங்கடசாமி (50). விவசாயியான இவர் ஜல்லிபட்டியில் இருந்து குடிமங்கலம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் (25) இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். இருவரது வாகனங்களும் நேருக்குநேர் மோதியதில் திருவேங்கடசாமி பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுராஜும் உயிரிழந்தார். இதுகுறித்து, நெகமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.