நாய்கள் கடித்து உயிரிழந்த கோழிகளுடன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி அடுத்த அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்தானம். விவசாயி.
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை உண்ண வரும் நாய்கள் தனது ஆட்டை கடித்து விட்டதாக சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆட்டுடன் வந்து அமர்ந்து வெள்ளிக்கிழமை முறையிட்டார்.
அதிகாரிகள் யாரும் அவரைக் கண்டுகொள்ளாததால் வீட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில், சந்தானம் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த 5 கோழிகளை நாய்கள் கடித்துக் கொன்றதாக கோழிகளுடன் சனிக்கிழமை மீண்டும் சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் வடக்கு ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவாரத்தை நடத்தினர். அப்போது இறைச்சிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சந்தானம் திரும்பிச் சென்றார்.