கோவை புரோஸோன் வணிக வளாகத்தில் ஜூவல் ஒன் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவையொட்டி திருநங்கை கல்கியின் "சகோதரி' அமைப்பு சார்பில் நாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஜூவல் ஒன் நிறுவனம், புரோஸோன் வணிக வளாகம், தினமணி நாளிதழ், ஞனரஞ்சனி, 641 எனும் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக "பொம்மைகள்' எனும் தலைப்பில் நவராத்திரி விழா அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நான்காவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியை பார்க் குழுமங்களின் முதன்மைச் செயல் அலுவலர் அனுஷா ரவி தொடக்கிவைத்தார். இதில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், நோ டம்பிங் அமைப்பின் அறங்காவலர் சரண்ராஜ், ஜூவல் ஒன் நிறுவனத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து, "சகோதரி' அறக்கட்டளை சார்பில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், திருநங்கை கல்கி, நடனக் கலைஞர் நவீன் உள்ளிட்டோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.