அன்னூர் அருகே பச்சாபாளையத்தில் லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
சூலூர் அருகே மேற்கு அரசூர், விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன் (22). லாரி ஓட்டுநர். வழக்கம்போல அக்டோபர் 11ஆம் தேதி பணிக்கு சென்றவர், அன்னூர் அருகே பச்சாபாளையம், செய்யாங்குட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.இதுகுறித்து அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
அதில், மணிகண்டனின் வீட்டின் அருகில் வசிக்கு மற்றோர் லாரி ஓட்டுநரான ரஞ்சித்குமாரின் மனைவி சத்யாவுக்கும், மணிகண்டனுக்கும் தொடர்பு இருந்து வந்ததும், அதுகுறித்து ரஞ்சித்குமாரும் அவரது மைத்துனர் தர்மராஜும் இருவரையும் கண்டித்ததும், மேலும் அது சம்பந்தமாக மணிகண்டனுக்கும், ரஞ்சித்குமாருக்கும் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.
இந்நிலையில், பச்சாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்துவிடம் ரஞ்சித்குமார் சனிக்கிழமை சரணடைந்தார்.
இதையடுத்து, அன்னூர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட ரஞ்சித்குமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருடன் அரசூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (27), சக்திவேல்குமார் (29), ரகுநாதன் (28), பார்த்திபன் (25) ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.