குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் கனவுகளை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கவிஞர் கவிதாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விஜயா பதிப்பகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மற்றும் அப்துல் கலாம் பொன்மொழிகள் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கவிஞர் பூ.மு.அன்புசிவா, மதுரை பாத்திமா கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியை சி.அருள்மைக்கேல்செல்வி ஆகியோர் தொகுத்த அப்துல் கலாமின் பொன்மொழிகள் என்ற நூலை பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் தே.ஞானசேகரன் வெளியிட கவிஞர் கவிதாசன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் கவிஞர் கவிதாசன் பேசியதாவது:
அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சி நாயகனாகத் திகழ்ந்தார். அவரின் பொன்மொழிகளை மாணவர்களிடத்தில் எடுத்துச் செல்வது மிகவும் அவசியம். இந்தியா வல்லரசாகவும், தன்னிறைவு பெற்ற நாடாகவும் மாறவே இந்தியா 2020 என்ற கனவுகளைக் கொடுத்துள்ளார். ஆகவே, கலாமின் கனவுகளை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்துப் பாடுபட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம், எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன், கவிஞர்கள் வானதி சந்திரசேகரன், அகிலா, கோவை கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.