கோவையில் தமிழ்க் கலைஞர்கள் சங்கமம் சார்பில் கண்ணதாசன் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்க் கலைஞர்கள் சங்கமம் சார்பில் பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தமிழ்க் கல்லூரியில் கண்ணதாசன் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், "வைகறையும் வைகுறுமீனும்' எனும் கவிதை நூலை காந்தி கண்ணதாசன் வெளியிட கவிஞர் புவியரசு பெற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் "அப்பா என்றொரு நண்பன்' எனும் தலைப்பில் காந்தி கண்ணதாசனும், "புவியரசரும் கவியரசரும்' எனும் தலைப்பில் கவிஞர் புவியரசுவும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், தமிழ்ப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் கோவை கொங்குநாடு கலை மன்றம் சார்பில் பரதம் மற்றும் கரகக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதில், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், தமிழ்க் கலைஞர்கள் சங்கமம் நிறுவனர் தமிழ் மணிகண்டன், கல்லூரி முதல்வர் ராசாமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.