திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த தகவலறிந்து மாரடைப்பால் உயிரிழந்த திமுக நிர்வாகி குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
அன்னூர் அருகே உள்ள நாகம்மாபுதூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (63). இவர், அன்னூர் பேரூராட்சி 3ஆவது வார்டு திமுக பொருளாளராக உள்ளார். இவர், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த தொலைகாட்சி செய்தியை ஜூலை 29ஆம் தேதி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஜூலை 31ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், திமுக திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயருமான செல்வராஜ், அன்னூர் ஒன்றியச் செயலாளர் இ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அன்னூர் ஆர்.நடராசன் ஆகியோர் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை கோவிந்தராஜின் மனைவி ராஜாமணியிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன், திமுக நகரப் பொறுப்பாளர் ரஹமத்துல்லா, பேரூர் அவைத் தலைவர் சண்முகம், ஒன்றியப் பிரதிநிதிகள் பழனிசாமி, விஸ்வநாதன் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.