கோவையில் நகைப் பறிப்பு, வழிப்பறி வழக்கில் சினிமா துணை நடிகர் மற்றும் அவரது மனைவியை தனிப் படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கோவை மாநகரில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மர்ம நபர்கள் நகைப் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக மாநகர காவல் ஆணையருக்குப் புகார்கள் வந்தன. இந்தப் புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டிருந்தார். இதன்படி காவல் துணை ஆணையர் (குற்றப் பிரிவு பொறுப்பு) எஸ்.லட்சுமியின் நேரடி மேற்பார்வையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப் படையினர் நடத்திய விசாரணையில், பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் காளியாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் (35) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மீது ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் இரு நகைப் பறிப்பு வழக்குகளும், போத்தனூர், சிங்காநல்லூரில் தலா ஒரு வழக்கு என 4 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அவரது மனைவி சூர்யா (30) பேருந்துகளில் தனியாகச் செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. நடிகர் தனுஷ் நடித்த கொடி திரைப்படத்தில் சீனிவாசன் சிறு வேடத்தில் நடித்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தம்பதி இருவரையும் கைது செய்த தனிப் படையினர் அவர்களிடமிருந்து 15 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.