அன்னூர் கே.ஜி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவை மற்றும் நீலகிரி மண்டல அளவில் நடைபெற்ற வளையப் பந்து போட்டிகளில் அன்னூர் கே.ஜி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் பங்கேற்றனர். இந்த போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டவர்கள் பிரிவில் கே.ஜி பள்ளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவிகள் பூஜாதேவி, காவிய ஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
மேலும் காரமடை எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் நடைபெற்ற குறுமைய அளவிலான போட்டிகளில் மொத்தம் 82 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். காரமடை கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் இளையோருக்கான போட்டியில் பூஜாதேவி, காவிய ஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். மூத்தோருக்கான தடகள போட்டியில் சௌமியா 1500 மீட்டர் பிரிவில் முதலிடமும், 3000 ஆயிரம் மீட்டர் பிரிவில் 2-ஆம் இடமும் பெற்றார்.
மிக மூத்தோருக்கான 1500 மீட்டர் பிரிவில் தீபிகா இரண்டாமிடம் பெற்றார். வட்டு எறிதல் போட்டியில் குமுதினி இரண்டாமிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி நிர்வாக அறங்காவலர் சாந்தாமணி ராமசாமி, செயலர் பாக்கியலட்சுமி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.