கோவை, குனியமுத்தூரில் பிளாஸ்டிக் குடோன் மற்றும் சோபா கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பிளாஸ்டிக் மற்றும் மரப் பொருள்கள் தீயில் கருகின.
கோவை, குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் பெரியசாமி வீதியில் குனியமுத்தூர் கங்கா நகரைச் சேர்ந்த முகமது ஷாஜூ (42) என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இவரது குடோனுக்கு அருகில் உக்கடம் பிலால் நகரைச் சேர்ந்த முகமது இப்ராகிம் (37) என்பவருக்குச் சொந்தமான சோபா தயாரிக்கும் கடை உள்ளது.
இந்நிலையில் இருவரும் வியாழக்கிழமை கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றனர். இதையடுத்து, வியாழக்கிழமை நள்ளிரவில் பிளாஸ்டிக் குடோனில் இருந்து புகை வெளியேறியுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த சோபா கடைக்கும் பரவியது.
இதைப் பார்த்த, அவ்வழியாக சென்றவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து, கோவை தெற்கு தீயணைப்பு நிலைய உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் மூன்று வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பிளாஸ்டிக் குடோனில் இருந்த பொருள்கள் மற்றும் சோபா கடையில் இருந்த மரப் பொருள்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.