கோவை, போத்தனூர் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 4 இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கோவை, சுந்தராபுரத்தில் இருந்து மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலையில் போத்தனூர் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாலம் அருகே இருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் பிடித்தனர். விசாரணையில், அவர்கள், பிள்ளையார்புரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (22), கணேசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (21) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1,300 கிராம் கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதே போல, போத்தனூர் காவல் எல்லைக்கு உள்ள மற்றொரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பிள்ளையார்புரத்தைச் சேர்ந்த சங்கர் (21), மதன்குமார் (25) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1,200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.