ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 141 பயனாளிகளுக்கு ரூ. 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் விழாவுக்கு, ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு, ரூ. 23 லட்சத்து 47 ஆயிரத்து 600 மதிப்பு கொண்ட 40 மூன்று சக்கர ஸ்கூட்டர்களை வழங்கினர்.
மேலும், சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் பெறப்பட்ட வட்டித் தொகையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக 100 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சத்து 25 ஆயிரத்து 800 மதிப்பில் பயிற்சிப் பொருள்கள் அடங்கிய பரிசுப் பெட்டகம் (ஒன்றின் மதிப்பு ரூ. 5,258 வீதம்) வழங்கப்பட்டது.
மாநில அளவில் காது கேளாதோர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்குப் பரிசுத் தொகையாக ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மொத்தம், 141 பயனாளிகளுக்கு ரூ. 29 லட்சத்து 3 ஆயிரத்து 400 மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. விழாவில், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வகுமார சின்னையன், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.