நம்பியூர் குமுதா கல்வி நிறுவனங்களின் 40-ஆவது ஆண்டு விழா குமுதா கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்குப் பள்ளியின் சட்ட ஆலோசகரும், அவிநாசி வழக்குரைஞருமான ஏ.சின்னசாமி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம் வரவேற்றார். பள்ளிச் செயலர் டாக்டர் ஜ.அரவிந்தன், இணைச் செயலர் டாக்டர் மாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைத் தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். முதல்வர் மஞ்சுளா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார், தமிழ்நாடு நர்ஸரி, பிரைமரி-மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பங்கேற்றுப் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினர்.
இதில், சர்வதேச அளவிலான கடற்கரை கைப்பந்துப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற குமுதா மெட்ரிக் பள்ளி மாணவிகளான எஸ்.நவீனா, ஆர்.சோபியா ஆகியோருக்குப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில், பல்வேறு பள்ளிகளின் தாளாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் வசந்தி நன்றி கூறினார்.